செய்திகள்
சமூக வலைதளங்கள் மூலமாக அழுக்கை பரப்ப வேண்டாம் - பிரதமர் மோடி அட்வைஸ்
ஒருவர் பொய்யை பரப்புவதன் மூலமாக சமுதாயத்தில் எவ்வளவு சேதம் விளைவிக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியவில்லை என பிரதமர் மோடி பேசியுள்ளார். #PMModi
புதுடெல்லி:
தனது தொகுதியான வாரனாசியில் பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி இன்று உரையாடினார். அப்போது தொண்டர்கள் கேள்விக்கும் அவர் பதிலளித்து பேசினார். அவர் பேசுகையில்:-
எல்லோரும் சமூக வலைதள ஊடகங்ளை ஒருபோதும் அழுக்கை பரப்புவதற்காக பயன்படுத்தக்கூடாது, அவர்களைச் சுற்றியுள்ள பல நல்ல விஷயங்கள் உள்ளன. அதனை பரப்புவதற்காக பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் மக்கள் கண்ணியத்தின் எல்லைகளை தாண்டி வருகிறார்கள்.
அவர்கள் பொய்யைப் பார்ப்பார்கள் அல்லது கேட்பார்கள். அதை மற்றவர்களுக்கு பகிரிந்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் சமுதாயத்தில் எவ்வளவு சேதம் விளைவிக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியவில்லை. சிலர் எந்தவொரு கண்ணியமான சமுதாயத்திற்கும் பொருந்தாத வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். பெண்களைப் பற்றி அவர்கள் கூறுகிறார்கள் அல்லது எழுதுகிறார்கள். இந்த பிரச்சினை எந்தவொரு அரசியல் கட்சியையோ அல்லது சித்தாந்தத்தை சேர்ந்ததோ அல்ல.
என மோடி பேசினார்.
நாட்டைப் பற்றிய நேர்மறையான செய்திகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய மோடி, இந்தியாவின் மாறும் முகத்தை உயர்த்திப் பேசும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார், நாடு இப்போது வரலாற்றில் இல்லாத முன்னேற்றத்தை கண்டிருக்கிறது என்று கூறினார்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் இப்போது மின்சாரம், பள்ளிகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளன. நாடு மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக மாறியுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாறியுள்ளது. விமான சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. ஏசி ரயில்களில் பயணிப்பதை விட அதிகமான மக்கள் விமானத்தில் பறக்கின்றனர். இந்த வளர்ச்சிகள் ஒவ்வொரு இந்தியர்களையும் பெருமை அடைய செய்யும் என மோடி கூறினார்.
வாரனாசியில் தனது அரசு செயல்படுத்தி வரும் அபிவிருத்தி பணிகளை பற்றி கூறினார். விமான நிலையத்திற்கு இரயில்வே நிலையத்திற்கான பாதைகளில் இருந்து மாற்றம் காணப்படுவதாகவும் அது புனித நகரத்தின் முன்னேற்றத்திற்கு உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார்.