செய்திகள்
ஐதராபாத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்கிறார் ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான ராகுல் காந்தி முதன்முறையாக இன்று தெலுங்கானா மாநிலத்துக்கு செல்கிறார். #RahulGandhi
ஐதராபாத்:
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான ராகுல் காந்தி முதன்முறையாக இன்று தெலுங்கானா மாநிலத்துக்கு செல்கிறார்.
கர்நாடக மாநிலத்தின் பிடார் மாவட்டத்தில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ஷம்சாபாத் விமான நிலையத்தை ராகுல் வந்தடைகிறார்.
அங்கு அவரை வரவேற்க தெலுங்கானா மாநில காங்கிரசார் பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன்பின்னர், ஐதராபாத்தில் உள்ள சட்டசபை அருகே அமைக்கப்பட்டுள்ள தெலுங்கானா தனிமாநில போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவிடத்துக்கு செல்லும் ராகுல் அஞ்சலி செலுத்துகிறார்.
தொடர்ந்து, கிளாசிக் கன்வென்ஷன் அரங்கத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்தவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். மாலையில் செர்லிங்கம்பள்ளி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
நாளை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த பத்திரிகை ஆசிரியர்கள், நிருபர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ராகுல் கலந்துரையாடுகிறார். இரு மாநிலங்களை சேர்ந்த பிரபல நிறுவனங்களின் இளம்வயது தலைமை செயல் அதிகாரிகளிடையேயும் அவர் பேசுகிறார். சரூர்நகரில் மாணவர்களை சந்திக்கும் ராகுல், நாளை இரவு டெல்லி திரும்புகிறார். #RahulGandhi #RahulHyderabadvisit