செய்திகள்
பெங்களூருவில் இருந்து விமான கண்காட்சி மாற்றப்பட்டது ஏன்? - குமாரசாமி
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு விமான கண்காட்சி மாற்றப்படுவது ஏன் என முதல் மந்திரி குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். #Kumaraswamy #AeroShow
பெங்களூரு:
உலக அளவில் பிரபலமான இந்திய விமானத் தொழில் கண்காட்சி, 1996-ஆம் ஆண்டு முதல் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெங்களூரு ஹெப்பாளில் உள்ள விமானப் படைத் தளத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்துள்ளது.
இதற்கிடையே, இந்த ஆண்டு விமான கண்காட்சி பெங்களூருவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த அறிவிப்புக்கு கர்நாடகம் மாநில முதல் மந்திரி குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் ஹுப்ளியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், விமான கண்காட்சியை பெங்களூருவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் தலைநகர் லக்னோவுக்கு இடம் மாற்றுவது சரியல்ல. இதன்மூலம் கர்நாடக மாநிலத்தை அலட்சியப்படுத்துவது ஏற்புடையதல்ல.
பெங்களூருவில் விமான கண்காட்சியை நடத்துவதற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் நிறைந்துள்ளது. இந்த கண்காட்சியை மாற்றும் முடிவை மத்திய அரசு எடுத்தது ஏன் என தெரியவில்லை. இங்குள்ள பாஜக சகோதரர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றார் குமாரசாமி. #Kumaraswamy #AeroShow