செய்திகள்

மகாராஷ்டிரா பேருந்து விபத்து - 30 பேரின் உடல்கள் மீட்பு

Published On 2018-07-29 22:44 GMT   |   Update On 2018-07-29 22:44 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்த பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியான 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. #MaharashtraAccident
மும்பை:

மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழக ஊழியர்கள் சத்தாரா என்ற இடத்துக்கு சுற்றுலா செல்வதற்காக நேற்றுமுன்தினம் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ் ராய்காட் மாவட்டம் போலட்பூர் மலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள 500 அடி பள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.



இந்த கோர விபத்தில் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் டிரைவர் என 33 பேர் உடல் சிதறி பலியானார்கள். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பல்கலைக்கழக ஊழியர் பிரகாஷ்சாவந்த் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பஸ் விழுந்து நொறுங்கிய இடம் செடி, கொடிகள் அடர்ந்த பகுதி என்பதால் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. முதல் கட்டமாக 14 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டு இருந்தன. இந்த உடல்களை மீட்பதற்கு மட்டுமே 6 மணி நேரம் ஆனது.

சவாலாக இருந்த மீட்பு பணி நேற்றும் தொடர்ந்து நடந்தது. நேற்று வரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மீட்கப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.  #MaharashtraAccident #Tamilnews 
Tags:    

Similar News