செய்திகள்

மழை காரணமாக அமர்நாத் யாத்திரை ஒத்திவைப்பு

Published On 2018-06-28 10:30 IST   |   Update On 2018-06-28 10:30:00 IST
2 மாதங்கள் நடைபெற உள்ள அமர்நாத் யாத்திரை இன்று துவங்க இருந்த நிலையில், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #AmarnathYatra
ஸ்ரீநகர்:

ஆண்டு தோறும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வர். கடந்த ஆண்டு இந்த யாத்திரையின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இந்த ஆண்டு யாத்திரைக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 40 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு ரேடியோ அதிர்வெண் பயன்படுத்தி யாத்ரீகர்களின் வாகனங்களை பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று துவங்கி ஆகஸ்ட் மாதம் இறுதி வரை இந்த அமர்நாத் யாத்திரை நடைபெற உள்ளது.



இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பாரம்பரியமிக்க பகல்காம் மற்றும் பல்தல் பாதைகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பாதயாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மழை நின்ற பின்னர், பாத யாத்திரை மேற்கொள்வதற்கான பாதுகாப்பான நிலையை உறுதி செய்த பின்னர் பனி லிங்கம் உருவாகும் புனித குகைக்குச் செல்ல யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #AmarnathYatra
Tags:    

Similar News