செய்திகள் (Tamil News)

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைமை செயலாளராக சுப்புரமணியம் பொறுப்பேற்றார்

Published On 2018-06-23 11:52 GMT   |   Update On 2018-06-23 11:52 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைமை செயலாளராக சத்தீஸ்கர் மாநில அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வந்த சுப்ரமணியம் பொறுப்பேற்றுக்கொண்டார். #BVRSubrahmanyam #JammuKashmir
ஜம்மு:

காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்த நிலையில், மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல்மந்திரி பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கப்போவதில்லை என்று பா.ஜ.க.வும் அறிவித்தது.

இதையடுத்து அம்மாநில கவர்னரின் பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது.

காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமலில் உள்ள நிலையில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுப்ரமணியம் (55) காஷ்மீரின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

முன்னதாக இவர், சத்தீஸ்கர் மாநில அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்று ஜம்முவில் உள்ள அரசு தலைமை செயலகத்துக்குச் சென்ற சுப்பிரமணியம் பி.பி. வியாசிடம் இருந்து தலைமை செயலாளர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

தலைமை செயலகத்துக்கு வந்த சுப்பிரமணியத்தை உள்துறை செயலாளர் ஆர்.கே கோயல், சுகாதாரத்துறை செயலாளர் பவன் கோட்வால், திட்ட மேலாண்மைத்துறை செயலாளர் ரோகித் கன்சால், மற்றும் கமிஷ்னர் ஹிலால் அகமது பார்ரே மற்றும் மூத்த அதிகாரிகள் பலர் வரவேற்றனர். #BVRSubrahmanyam #JammuKashmir
Tags:    

Similar News