செய்திகள்
10 ஆண்டுகளில் நான்காவது முறையாக கவர்னர் ஆட்சியை சந்திக்கும் ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி முடிவுக்கு வந்த நிலையில், அங்கு விரைவில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட உள்ளது. #BJPPDP #BJPDumpsPDP
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் ஆளும் பிடிபி கூட்டணியில் இருந்து விலகுவதாக பாஜக இன்று அறிவித்தது. இதனை அடுத்து, போதிய பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். பல்வேறு விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் இருந்த நிலையில், காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்துள்ளது பரபரப்பான ஒன்றாகியுள்ளது.
காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான பணிகளில் உள்துறை அமைச்சகம் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் நான்காவது முறையாக காஷ்மீர் கவர்னர் ஆட்சியை சந்திக்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் - பிடிபி கூட்டணி ஆட்சியில் இருந்த போது காங்கிரஸின் குலாம் நபி ஆசாத் முதல்வராக இருந்தார்.
அமர்நாத் நில விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்டதன் காரணமாக இந்த கூட்டணி உடைந்தது. குலாம் நபி ஆசாத் வாபஸ் பெற்றதால், கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதன் பின், 2014-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி ஆட்சி அமைக்க இழுபறி நீடித்த நிலையில், கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
காஷ்மீரில் பாஜக - பிடிபி கூட்டணி ஆட்சி நடந்த நிலையில் முதல்வராக இருந்த முப்தி முகம்மது சயீத் உடல்நலக்குறைவு காரணமாக ஜனவரி 2016-ல் மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பின், சயீத்தின் மகள் மெகபூபா முப்தி முதல்வராவார் என கூறப்பட்டது.
ஆனாலும், பாஜக கூட்டணிக்கு கட்சியின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஆட்சியமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனை அடுத்து, கவர்னர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. தற்போது, பாஜக - பிடிபி கூட்டணி முறிந்துள்ளதால் 10 ஆண்டுகளில் நான்காவது முறையாக கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட உள்ளது.