search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PDP"

    • கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • பா.ஜ.க.வில் சேராதவர்கள், சிறைக்குச் செல்வோர் முற்றிலும் நிரபராதிகள் என்றார் மெகபூபா முப்தி.

    ஸ்ரீநகர்:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

    கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகள் பா.ஜ.க.வில் சேருகிறார்கள், அதன்பின் அவர்களுக்கு எதிராக எல்லாமே அழிக்கப்படுகிறது.

    அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் அப்பாவிகள்.

    பா.ஜ.க.வில் சேராதவர்கள், சிறைக்குச் செல்வோர் முற்றிலும் நிரபராதிகள்.

    தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கிறது பா.ஜ.க. என தெரிவித்தார்.

    • தைவானின் சுதந்திர உரிமையையும், தன்னாட்சியையும் சீனா ஏற்க மறுக்கிறது
    • தைவான் மக்கள் ஜனநாயகத்தை நம்புவதை உறுதி படுத்தினர் என அமெரிக்கா பாராட்டியது

    கிழக்கு ஆசியாவில், வடமேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடு, தைவான் (Taiwan). இதன் தலைநகரம் தைபே (Taipei).

    தன்னை முழு சுதந்திர நாடாக தைவான் பிரகடனப்படுத்தி கொண்டாலும், சீனா அதனை ஏற்க மறுத்து, தனது ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடாகவே கருதி அந்நாட்டை ஆக்கிரமிக்க வான்வழியாகவும், கடல் வழியாகவும் பல ராணுவ அத்துமீறல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    தைவானின் தன்னாட்சி உரிமைக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. ஆனால், அமெரிக்காவின் தைவான் ஆதரவு நிலைப்பாட்டை சீனா விரும்பவில்லை.

    இதனால் இரு நாடுகளுக்கு இடையே சச்சரவு நிலவி வருகிறது.

    இது குறித்து அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன் அமெரிக்க-சீன ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையின் போது, "தைவான் விஷயத்தில் சமரசமே இல்லை" என சீனா திட்டவட்டமாக தெரிவித்தது.

    இந்நிலையில், 2024 ஜனவரி 13 அன்று அந்நாட்டிற்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது.

    தேர்தல் முடிவுகளில், ஜனநாயக வளர்ச்சி கட்சியை (PDP) சேர்ந்த லாய் சிங்-டெ (Lai Ching-te), குவோமின்டாங் (Kuomintang) கட்சியை சேர்ந்த ஹவ் யூ-ஹி (Hou Yu-ih) பெற்ற வாக்குகளை விட 9,00,000 வாக்குகள் அதிகம் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    லாய் வெற்றி பெற்றதற்கு தைவான் மக்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா நேற்று அறிக்கை வெளியிட்டது.

    இதில், "தங்கள் நாட்டின் வலிமையான ஜனநாயகத்தின் மீதும், தேர்தல் வழிமுறைகளின் மீதும் தைவான் நாட்டு மக்கள் வைத்திருந்த அபாரமான நம்பிக்கையை மீண்டும் அவர்கள் வெளிப்படுத்தி உள்ளது மகிழ்ச்சியை தருகிறது" என தெரிவித்தது.

    ஆனால், இதனை விரும்பாத சீனா கண்டனம் வெளியிட்டுள்ளது.

    இது குறித்து சீன செய்தி தொடர்பாளர், "தைவானின் சுதந்திரம் எனும் பெயரில் அங்கு போராடும் பிரிவினை அமைப்புகளுக்கு அமெரிக்காவின் பாராட்டு, தவறான செய்தியை அளிக்கும். சீனா இதனை வன்மையாக கண்டிப்பதுடன், எதிர்க்கவும் செய்கிறது. அமெரிக்க தரப்பிற்கு எங்கள் எதிர்ப்பு குறித்து தெரிவித்து விட்டோம். வாஷிங்டனின் இந்த அறிக்கை, ஒரே சீனா எனும் எங்களின் கோட்பாட்டிற்கு எதிரானது. அதிகாரபூர்வமாக தைவானுடன் அமெரிக்கா உறவு கொண்டாடுவதை நிறுத்துமாறு சீனா வலியுறுத்துகிறது" என கூறினார்.

    ஜம்மு காஷ்மீரில் பிடிபி மற்றும் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JKGovt #Mehbooba #GrandAllianceInJK
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), பா.ஜ.க. ஆதரவுடன் கடந்த 1-3-2015 அன்று ஆட்சி அமைத்தது. பி.டி.பி. தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல் மந்திரியாகவும், பா.ஜ.க. தரப்பில் நிர்மல் சிங் துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றனர்.  முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி தொடர்ந்தது.

    ஆனால், ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, கடந்த ஜூன் மாதம் கூட்டணி அரசில் இருந்து பாஜக விலகியது. இதையடுத்து முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். அதன்பின்னர் எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராததால் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. இதற்காக மெகபூபா முப்தியின் பிடிபி, காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆலோசனை நடத்தின.

    இந்த ஆலோசனையின் முடிவில் பிடிபியும் காங்கிரசும் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்திருப்பதாகவும், இந்த கூட்டணிக்கு பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய கூட்டணி வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.



    3 கட்சி தலைவர்களும் ஆளுநரை சந்தித்து இன்று ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பிடிபி கட்சியின் எம்எல்ஏக்களை இழுப்பதற்கு பாஜக முயற்சிகள் மேற்கொண்டு வருவதால், எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    87 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபையில் பிடிபி கட்சிக்கு 28 உறுப்பினர்களும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 உறுப்பினர்களும் இருப்பதால், இந்த கூட்டணிக்கு ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை உள்ளது குறிப்பிடத்தக்கது. #JKGovt #Mehbooba #GrandAllianceInJK
    பிடிபி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரின் தனிப்பாதுகாப்பு அதிகாரி ஏகே 47 துப்பாக்கிகளுடன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #PDP
    ஸ்ரீநகர் :

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான ஆட்சிக்கு பாரதிய ஜனதா கட்சி அளித்து வந்த ஆதரவை சமீபத்தில் விலக்கிக்கொண்டதால் அம்மாநிலத்தில் மக்கள் ஆட்சி கலைக்கப்பட்டு கவனர் ஆட்சி அமலில் உள்ளது.

    இதற்கிடையே, மெகபூபா முப்தியின் பி.டி.பி கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வாச்சி ஐசாஷ் அகமது மிர் என்பவரின் தனிப்பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தப்பியோடியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக காஷ்மீர் மாநில போலீசார் ஊடகங்களிடம் கூறுகையில், ’ஜவகர் நகரில் உள்ள எம்.எல்.ஏ வாச்சி ஐசாஷ் அகமது மிர்க்கு சொந்தமான இல்லத்தில் இருந்து 7 ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் 2 கைத்துப்பாக்கிகளுடன் எம்.எல்.ஏ.வின் தனிப்பாதுகாப்பு அதிகாரி தப்பியோடிவிட்டார்.

    தப்பியோடிய தனிப்பாதுகாப்பு அதிகாரின் பெயர் அடில் ரஷித், அவரை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அடில் ரஷித் பற்றி போலீசாரிடம் தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்’ என தெரிவித்தனர். #PDP
    ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியை பிளவுப்படுத்த முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஆபத்தான எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என மெகபூபா முப்தி எச்சரித்துள்ளார். #Mehbooba #PDP
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையில் நடைபெற்றுவந்த மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு அங்கு தற்போது கவர்னர் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி எங்கள் கட்சியை பிளவுப்படுத்த முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஆபத்தான எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.

    1987-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பின்னர் எங்கள் கட்சியை பிளவுப்படுத்த நினைத்த முயற்சியால்தான் சையத் சலாவுதீன் (தற்போது பாகிஸ்தானில் வாழும் ஹிஜ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன்) முஹம்மது யாசின் மாலிக் போன்ற பிரிவினைவாதிகள் உருவானார்கள்.

    இதேபோல், இப்போதும் எங்கள் கட்சியை உடைக்க டெல்லியில் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

    எல்லா குடும்பங்களில் உள்ளதுபோல் எங்கள் கட்சிக்குள்ளும் சில கருத்து வேறுபாடுகள் உண்டு. அது பேசி தீர்க்கப்படும். டெல்லியின் தலையீடு இல்லாமல் எந்த பிளவும் இங்கு ஏற்பட முடியாது. அப்படி பிளவுப்படுத்துவதன் மூலம் மேலும் ஒரு பயங்கரவாதியை உருவாக்க முடியாது.

    காஷ்மீர் வாக்காளர்களின் ஓட்டுகளை கவர்வதற்காக டெல்லியால் உருவாக்கப்படும் ஒரு கட்சியின் அழிவுக்காக இங்குள்ள மக்கள் ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

    என் கட்சி பலமாக  உள்ளது. எங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை நாங்களே தீர்த்து கொள்வோம். 1987-ம் ஆண்டு ஐக்கிய முஸ்லிம் முன்னணியை ஒடுக்க நினைத்ததுபோல் எந்த முயற்சி நடந்தாலும் அதன் எதிர்வினைகள் மிகவும் ஆபத்தானதாக அமையும் எனவும் மெகபூபா எச்சரித்தார். #Mehbooba #PDP  
    காஷ்மீர் கவர்னரின் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், தலைமை செயலாளராக சுப்ரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். #BJPDumpsPDP #JKGovernorRule #BVRSubrahmanyam #VijayKumarIPS
    ஜம்மு:

    காஷ்மீர் கவர்னரின் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், தலைமை செயலாளராக சுப்ரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்த நிலையில், நேற்று பகிரங்கமாக வெடித்தது. மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கப்போவதில்லை என்று பா.ஜ.க.வும் அறிவித்தது.

    இதையடுத்து அம்மாநில கவர்னரின் பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இன்று முதல் ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

    இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமலில் உள்ள நிலையில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுப்ரமணியம் (55) காஷ்மீரின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல், கவர்னரின் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் மற்றும் பி.பி.வியாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுகொன்ற அதிரடிப்படையினருக்கு விஜயகுமார் ஐபிஎஸ் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. #BJPDumpsPDP #JKGovernorRule #BVRSubrahmanyam #VijayKumarIPS
    காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமலில் உள்ள நிலையில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா வரும் 21-ம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் செய்யவுள்ளார். #AmitShah
    ஸ்ரீநகர் :

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்துக் கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தன. கடந்த சில மாதங்களாகக் கூட்டணிக்குள் ஏற்பட்ட சலசலப்பால் அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக கட்சி திடீரென வாபஸ் பெற்றது.

    இதைத் தொடர்ந்து பெரும்பான்மை இல்லாத காரணத்தால், முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். தற்போது அம்மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமலில் உள்ளது.

    இந்நிலையில், காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவிந்திர ரெய்னா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :-

    பாரதிய ஜனசங்க தலைவர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினத்தை முன்னிட்டு பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா வரும் ஜூன் 23-ம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் செய்யவுள்ளார்.

    இந்த பயணத்தின் போது, அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது மற்றும் மாநிலத்தின் தற்போதைய சூழல் குறித்து மாநில தேர்தல் பணி குழு நிர்வாகிகளுடன் அவர் அலோசனை செய்ய உள்ளார்.

    அன்றைய தினம், பாரதிய ஜனசங்க தலைவர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜிக்கு அவர் நினைவு அஞ்சலி செலுத்திய பிறகு பிராமின் சபா பரேட் சாலையில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #AmitShah
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி முடிவுக்கு வந்த நிலையில், அங்கு விரைவில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட உள்ளது. #BJPPDP #BJPDumpsPDP
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் ஆளும் பிடிபி கூட்டணியில் இருந்து விலகுவதாக பாஜக இன்று அறிவித்தது. இதனை அடுத்து, போதிய பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். பல்வேறு விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் இருந்த நிலையில், காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்துள்ளது பரபரப்பான ஒன்றாகியுள்ளது. 

    காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான பணிகளில் உள்துறை அமைச்சகம் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் நான்காவது முறையாக காஷ்மீர் கவர்னர் ஆட்சியை சந்திக்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் - பிடிபி கூட்டணி ஆட்சியில் இருந்த போது காங்கிரஸின் குலாம் நபி ஆசாத் முதல்வராக இருந்தார்.

    அமர்நாத் நில விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்டதன் காரணமாக இந்த கூட்டணி உடைந்தது. குலாம் நபி ஆசாத் வாபஸ் பெற்றதால், கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதன் பின், 2014-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி ஆட்சி அமைக்க இழுபறி நீடித்த நிலையில், கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    காஷ்மீரில் பாஜக - பிடிபி கூட்டணி ஆட்சி நடந்த நிலையில் முதல்வராக இருந்த முப்தி முகம்மது சயீத் உடல்நலக்குறைவு காரணமாக ஜனவரி 2016-ல் மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பின், சயீத்தின் மகள் மெகபூபா முப்தி முதல்வராவார் என கூறப்பட்டது.

    ஆனாலும், பாஜக கூட்டணிக்கு கட்சியின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஆட்சியமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனை அடுத்து, கவர்னர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. தற்போது, பாஜக - பிடிபி கூட்டணி முறிந்துள்ளதால் 10 ஆண்டுகளில் நான்காவது முறையாக கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட உள்ளது. 
    காஷ்மீர் மாநிலத்தை சீரழித்த பிறகு கூட்டணியில் இருந்து பா.ஜ.க விலகியுள்ளதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார். #BJPDumpsPDP #MehboobaMuftiresigns #ArvindKejriwal
    புதுடெல்லி :

    காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயகக் கட்சி – பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

    இதற்கிடையே, பல்வேறு விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் ஆட்சியை தொடர்வது இயலாத காரியம் என கூறி யாரும் எதிர்பாராத விதத்தில், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக பாஜக இன்று அறிவித்தது.

    பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோருடன் அலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் மாநில பா.ஜ.க பொறுப்பாளர் ராம் மாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இதனை அடுத்து, முதல்வர் மெகபூபா முப்தி தனது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பினார். அங்கு விரைவில் கவர்னர் ஆட்சி அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு காஷ்மீரில் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை உடைத்துவிட்டதாக பா.ஜ.க சுயதம்பட்டம் அடித்துகொண்டது. ஆனால் இப்போது என்ன ஆனது ? காஷ்மீரை சீரழித்த பிறகு கூட்டணியில் இருந்து அக்கட்சி விலகியுள்ளது. என்று தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்வு குறித்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர் பதிவு மூலம் கடுமையாக விமர்சித்துள்ளார். #KashmirCMresigns #BJPDumpsPDP #MehboobaMuftiresigns
    காஷ்மீரில் முதல்மந்திரி பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததால், அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்துறை மந்திரியுடன் ஆலோசித்து வருகிறார். #BJPDumpsPDP
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜ.க ஆதரவுடன் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைத்தது. ஜம்மு முதல்மந்திரி மெகபூபா முப்திக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக பா.ஜ.க அறிவித்தது.

    இதையடுத்து பெரும்பான்மையை இழந்த மெகபூபா முப்தி தாமாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து வெளியேறியதற்கு அம்மாநில மக்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்..

    இந்நிலையில், முதல்மந்திரியின் ராஜினாமாவைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் தற்காலிகமாக ஜனாதிபதி ஆட்சி அமையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் தேசிய பாதுகாப்பு சிறப்பு செயலாளர் ரினா மித்ரா ஆகியோர் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.

    விரைவில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதி ஆட்சி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #BJPDumpsPDP
    ஜம்மு காஷ்மீரில் மூன்றாண்டுகளாக கூட்டணியில் இருந்த பாஜக இன்று உறவை முறித்துள்ள நிலையில், முதல்வர் பதவி போனதில் எந்த அதிர்ச்சியும் இல்லை என ராஜினாமா செய்த பின் மெகபூபா முப்தி பேட்டி கூறியுள்ளார். #BJPDumpsPDP #BJPPDP
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், இன்று கூட்டணியில் இருந்து வெளியேவதாக பாஜக அறிவித்தது. இதனால், பிடிபி கட்சி தலைவர் மற்றும் முதல்வராக இருந்த மெகபூபா முப்தி தனது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பினார்.

    ராஜினாமா செய்த பின்னர் பத்திரிக்கையாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாஜக கூட்டணியை முறித்ததிலும், முதல்வர் பதவி பறிபோனதிலும் எனக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. ஏனென்றால், அதிகாரத்திற்காக இந்த கூட்டணி அமைக்கவில்லை. மிகப்பெரிய கனவை செயல்படுத்தவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டது. இருதரப்பு போர்நிறுத்தம், மோடியின் பாகிஸ்தான் பயணம், 11 ஆயிரம் இளைஞர்கள் மீதான வழக்குகள் வாபஸ் ஆகியவை நடந்துள்ளது.

    எனது ராஜினாமா கடித்தத்தை கவர்னரிடம் சமர்பித்தேன். மேலும், எந்த கூட்டணிக்கும் முயற்சிக்கவில்லை எனவும் அவரிடம் தெரிவித்தேன். காஷ்மீர் மீதான பாதுகாப்பு கொள்கை மாற்றப்பட வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தியுடனான கூட்டணியை பா.ஜ.க வாபஸ் பெறுவதாக அறிவித்ததை அடுத்து, காஷ்மீரை விட்டு பா.ஜ.க வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் அம்மாநில மக்கள் கொண்டாடி வருகின்றனர். #BJPDumpsPDP
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு பா.ஜ.க அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக இன்று பா.ஜ.க எம்.எல்.ஏக்களுடன் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய ஆலோசனைக்கு பின் அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் முதல்மந்திரி மெகபூபா முப்தி தனது முதல்வர் பதவியை ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார். இதனால், அம்மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



    இந்நிலையில், பா.ஜ.க காஷ்மீர் மாநிலத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக அம்மாநில மக்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.க ஆதரவு பெற்ற ஆட்சியின் முதல் நாளில் இருந்தே காஷ்மீர் மக்கள் நிம்மதியுடன் இல்லை எனவும், பா.ஜ.க ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேறியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர். #BJPDumpsPDP
    ×