செய்திகள்
பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை எட்ட வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்
நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சிமன்ற கூட்டத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்த எட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #NITIAayog #Modi
புதுடெல்லி:
மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.
மாலைவரை நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள், அனைத்து மாநில முதல் மந்திரிகள், யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள் மற்றும் மத்திய அரசின் முக்கிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தலைமையுரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் சுகாதார மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின்கீழ் 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சை பாதுகாப்பு கிடைக்கும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். நமது நாட்டில் திறமைகளுக்கும், வளங்களுக்கும் எந்த குறையும் இல்லை, கடந்த கால மத்திய அரசு தனது ஆட்சிக்காலத்தின் கடைசி நிதியாண்டில் அளித்ததைவிட மாநிலங்களுக்கு இந்த நிதியாண்டில் 6 லட்சம் கோடி ரூபாய் அதிகமாக அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். #NITIAayog #Modi #doubledigitsgrowth