செய்திகள்

பாபா ராம்தேவை குஷிப்படுத்த அசுர வேகத்தில் செயலாற்றிய உத்தரப் பிரதேச அரசு

Published On 2018-06-06 14:24 GMT   |   Update On 2018-06-06 14:24 GMT
உணவுப்பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு சரியான ஒத்துழைப்பு இல்லாததால் வெளியேறப் போவதாக பதாஞ்சலி நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், உ.பி அரசு அசுர வேகத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. #Patanjali
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் யமுனை விரைவுச்சலை பகுதியில்  6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உணவுப்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க பதஞ்சலி நிறுவனம்  திட்டமிட்டிருந்தது. இதற்கு யமுனை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து, உ.பி.யில் உணவுப்பூங்கா அமைப்பதை கைவிடுவதாகவும், இந்த தொழிற்சாலையை மற்றொரு மாநிலத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டு வருவதாக பதாஞ்சலி நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால கிருஷ்ணா நேற்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், பதாஞ்சலி நிறுவனத்தின் உணவுப்பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு தேவையான ஒப்புதல்களை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். “பதாஞ்சலி நிறுவனம் மாநிலத்தை விட்டு வெளியே போக விடமாட்டோம். இதற்கு தேவையான எல்லா நடவடிக்கையும் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என அம்மாநில தொழில்துறை மந்திரி சதிஷ் மஹானா தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச அரசின் இந்த விரைவான முடிவால், தனது முந்தைய முடிவை பதாஞ்சலி நிறுவனம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாகவே தொழில்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க நீண்ட காலம் எடுத்து கொள்ளும் அரசுகள் இருக்கும் நிலையில், பதாஞ்சலி நிறுவனத்தின் திட்டத்திற்கு ஒரே நாளில் உ.பி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News