செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக சட்டசபையில் உரையாற்றுகிறார் எடியூரப்பா

Published On 2018-05-19 10:01 GMT   |   Update On 2018-05-19 10:01 GMT
கர்நாடக சட்டசபையில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாக, முதலமைச்சர் எடியூரப்பா தனது திட்டங்கள் தொடர்பாக உரையாற்ற உள்ளார். #KarnatakaCMRace #KarnatakaFloorTest #YeddyurappaSpeach
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க. மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். இது எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 15 நாட்கள் அவகாசம் பெற்று, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரது ஆதரவுடன் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க பா.ஜ.க. திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டது.



அதன்படி இன்று சட்டமன்ற சிறப்பு கூட்டம்  நடைபெற்று வருகிறது. காலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். 195 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பிறகு சட்டசபை 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மற்ற எம்எல்ஏக்கள் 3.30 மணிக்கு பதவியேற்பார்கள் என தெரிகிறது. அதன்பின்னர் நம்பக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

ஆனால், மெஜாரிட்டிக்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை என்பது தெரிய வந்தால் உடனே ராஜினாமா செய்துவிட்டு கவுரவமாக வெளியேறும்படி எடியூரப்பாவுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, வாக்கெடுப்பை தவிர்க்கும் வகையில் வாக்கெடுப்புக்கு முன்னதாகவே எடியூரப்பா ராஜினாமா செய்யலாம் என்றும் கன்னட ஊடகங்களில் தகவல் வெளியானது.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக சட்டசபையில் உரையாற்ற எடியூரப்பா முடிவு செய்துள்ளார். இதற்காக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய அவர், 13 பக்கங்கள் கொண்ட உணர்ச்சிமிகு உரையை தயார் செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த உரையில், விவசாய கடன் தள்ளுபடி, நதிநீர் இணைப்பு போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த உரையை வாசித்து முடித்ததும் அவர் தன் பதவியை ராஜினாமா செய்யலாம் என தெரிகிறது. #KarnatakaCMRace #KarnatakaFloorTest #YeddyurappaSpeach

Tags:    

Similar News