செய்திகள்
இரு மஜத எம்எல்ஏக்களை பாஜகவினர் கடத்தி விட்டனர் - குமாரசாமி குற்றச்சாட்டு
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் கடத்தி விட்டதாக மஜத முதல்வர் வேட்பாளர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். #KarnatakaCMRace
ஐதராபாத்:
கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா நேற்று முன்தினம் முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்பதற்காக மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர். எடியூரப்பா பதவியேற்ற நிலையில், விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால், பாஜகவினர் அவர்களை எளிதில் தொடர்பு கொள்ளவோ, அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்கவோ வழி உள்ளது.
இதனால், எம்.எல்.ஏ.க்களை கேரளாவுக்கு இடம்மாற காங்கிரஸ், மஜத தலைமை திட்டமிட்டன. நேற்று முன்தினம் இரவு, தனியார் விமானம் மூலம் கொச்சி செல்ல ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், விமான போக்குவரத்து அமைச்சகம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதனால், நேற்று காலை இரண்டு கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஐதராபாத்துக்கு பேருந்து மூலம் சென்றனர். அவர்கள் அங்குள்ள இரண்டு சொகுசு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். விடுதியை சுற்றி பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று மாலை 4 மணிக்குள் கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் கடத்தி விட்டதாக மஜத முதல்வர் வேட்பாளர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும் எம்.எல்.ஏக்கள் மீண்டும் தங்களிடம் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக காங்கிரஸ் - மஜத கூட்டணியின் 118 எம்.எல்.ஏக்கள் அடங்கிய பட்டியல் ஆளுநரிடம் அளிக்கப்பட்டது. #KarnatakaCMRace