செய்திகள்

கர்நாடகாவின் ஜெயநகர் தொகுதியில் ஜூன் 11-ல் தேர்தல்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Published On 2018-05-18 16:01 IST   |   Update On 2018-05-18 16:01:00 IST
கர்நாடகாவில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட ஜெயநகர் தொகுதியில் ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. #KarnatakaElection #KarnatakaJayanagar
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் கடந்த 12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஜெயநகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் விஜயகுமார் பிரசாரத்தின்போது மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் ஒரு குடியிருப்பில் இருந்து கத்தை கத்தையாக வாக்காளர் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டதால் அந்த தொகுதியிலும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. எனவே, மீதமுள்ள 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இந்நிலையில், ஜெயநகர் தொகுதியில் ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது தொடர்பாக இன்று அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜெயநகர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மனு தாக்கல் செய்வதற்கு மே 25-ம்தேதி கடைசி நாள் ஆகும். 26-ம் தேதி  மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெற மே 28-ம் தேதி கடைசி நாள். 

அதன்பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஜூன் 11-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஜூன் 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

இதேபோல் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் மே 28-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மே 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

இதேபோல் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற குமாரசாமி ஒரு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்யும்போது அந்த தொகுதி காலியாகும். #KarnatakaElection #KarnatakaJayanagar
Tags:    

Similar News