செய்திகள்

பாக். அரசின் கண்ணில் மண் தூவி ஆப்கானிஸ்தானுக்கு பறந்த அமெரிக்க தூதரக அதிகாரி

Published On 2018-05-15 12:23 IST   |   Update On 2018-05-15 12:23:00 IST
பாகிஸ்தானில் விபத்தை ஏற்படுத்தி வழக்கில் சிக்கிய அமெரிக்க தூதரக அதிகாரி அந்நாட்டு அரசுக்கு தெரியாமல் ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச்சென்றுள்ளார். #Joseph Hall
இஸ்லாமாபாத்:

கடந்த மாதம் 7-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ராணுவ அதிகாரியாக பணியாற்றும் ஜோசப் இம்மானுவேல் ஹால் சென்ற கார் மோதியதில் அதீக் பெய்க் என்னும் 22 வயது வாலிபர் பலியானார். ஜோசப் குடித்து விட்டு வாகனம் ஓட்டி, சிகப்பு விளக்கு சிக்னலை கடந்து சென்று இந்த விபத்தை ஏற்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

தூதரக சலுகைகளை ஜோசப் பெற்றுள்ளதால் பாகிஸ்தான் அரசின் கிரிமினல் சட்டங்களின் கீழ் அவரது மேல் நடவடிக்கை எடுக்க முடியாது. எனினும், அவரிடம் விபத்து தொடர்பாக விசாரிக்கப்பட்டது. ஜோசப் அமெரிக்காவுக்கு திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, அதீக் பெய்க் பெற்றோர் இஸ்லாமாபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

விபத்தின் சிசிடிவி காட்சி

இதனை அடுத்து, நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் ஜோசப் பெயரை இணைக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, ஜோசப் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு தடை விதித்தது.

நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான் நாட்டின் பக்ராம் பகுதியில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஒரு விமானம் காலை சுமார் 11.15 மணியளவில் இஸ்லாம்பாத் நகரில் உள்ள நூர் கான் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.

சற்று நேரத்துக்குள் ஜோசப் இம்மானுவேல் ஹால் உள்ளிட்ட சுமார் பத்துபேர் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களில் ஜோசப் இம்மானுவேல் ஹால் வந்திருப்பதை அறிந்த பாகிஸ்தான் உளவுப்படை அதிகாரி அவரை விமானத்தில் ஏற அனுமதிக்காமல் தடுத்தி நிறுத்தியாக முதலில் கூறப்பட்டது.

இந்நிலையில், ஜோசப் அந்த விமானத்தில் ஆப்கானிஸ்தான் சென்றுள்ளதாக அமெரிக்க தூதரகம் உறுதி செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அவர் அமெரிக்காவுக்கு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Tags:    

Similar News