செய்திகள்

இந்தியாவின் முதல் முக்கியத்துவமான அண்டை நாடு நேபாளம் - பிரதமர் மோடி பேச்சு

Published On 2018-05-11 09:33 GMT   |   Update On 2018-05-11 09:33 GMT
நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் முதல் முக்கியத்துவமான அண்டை நாடு நேபாளம் என கூறினார். #modiinnepal #Janakpurtemple
காத்மாண்டு:

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று நேபாளம் சென்றார். நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்ட மோடி, நேபாளத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான ஜனக்பூருக்கு நேரடியாக சென்றார்.

ஜனக்பூர் நகரில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகருக்கு நேரடி பஸ் சேவையை இன்று தொடங்கி வைத்தார். அதன்பின் அங்குள்ள சீதை ஆலயத்தில் வழிபாடு செய்தார்.



இதையடுத்து, அங்கு கூடியிருந்த மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

சீதை பிறந்த இடத்திற்கு வந்து வழிபாடு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. நேபாளம் மற்றும் இந்தியாவில் உள்ள மக்கள் மரியாதை மற்றும் புகழினால் ஒருங்கிணைந்து உள்ளனர். நேபாளம் பல ஆண்டுகளாக ஆன்மீக சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது. நேபாளம் இல்லாமல் இந்தியாவின் நம்பிக்கை முழுமையற்றது.

இந்தியாவும், நேபாளமும் இணைந்து உள்ளதற்கு வரலாறு சான்றாக உள்ளது. எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் நேபாளம், இந்தியாவிற்கு துணையாக இருந்துள்ளது. ஜனக்பூரானது, ஜானக்கின் ராஜா மற்றும் ராஜா தசரதனை மட்டும் இணைக்க வில்லை, இந்தியாவையும், நேபாளத்தையும் இணைத்துள்ளது.



நான் இந்தியா குறித்து மட்டும் பேசவில்லை. அண்டை நாடுகளின் வளர்ச்சி குறித்தும் பேசுகிறேன். நேபாளம் வளர்ச்சியடைந்து வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இரு அண்டை நாடுகளும், பாரம்பரியம், வியாபாரம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து ஆகிய 5 துறைகளிலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும், ஜனக்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்கு 100 கோடி ரூபாய்  வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

என மோடி கூறினார். #modiinnepal #Janakpurtemple

Tags:    

Similar News