செய்திகள்

பசு பாதுகாப்பு பெயரில் காங்கிரஸ் ஆட்சியில் தான் அதிக கொலை நடந்தது: அமித்ஷா

Published On 2017-07-03 05:48 GMT   |   Update On 2017-07-03 05:48 GMT
பசு பாதுகாப்பு பெயரில் காங்கிரஸ் ஆட்சியில் தான் அதிக கொலை நடந்தது என்று அகில இந்திய பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறினார்.
பனாஜி:

அகில இந்திய பா.ஜனதா தலைவர் அமித்ஷா கோவாவில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் கொலை சம்பவங்கள் புதியது அல்ல. ஏற்கனவே இதுபோன்ற கொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

ஆனால் எங்கள் ஆட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் திசை திருப்பி வருகிறார்கள். கடந்த 3 ஆண்டு பா.ஜனதா ஆட்சியை விட அதற்கு முன்பு நடந்த காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற கொலைகள் அதிக அளவில் நடந்துள்ளன.

இதற்காக இந்த கொலையை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் எங்கள் மீது பழிபோடும் வகையில் செயல்படுவதால் நான் இந்த விவரத்தை கூறுகிறேன். இதுபோன்ற கொலைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்களால் நாட்டில் பீதி நிலவுவது போல காங்கிரசார் பிரசாரம் செய்து வருகிறார்கள். எந்த இடத்திலும் இதுபோன்ற பீதி நிலவவில்லை. மக்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எங்கள் அரசு ஒதுபோதும் துணை போகாது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News