இந்தியா

நாசிக் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- ஒருவர் உயிரிழப்பு

Published On 2023-01-01 18:31 IST   |   Update On 2023-01-01 18:31:00 IST
  • தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
  • தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

நாசிக்:

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம், முண்டேகான் கிராமத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். காலை 11 மணியளவில் ஒரு பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. பின்னர் தீ மளமளவென ஆலையின் மற்ற பகுதிக்கும் பரவியது. தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தொழிலாளர்கள் அலறியடித்து வெளியேறினர். இருப்பினும் சிலர் தீப்பற்றிய பகுதிக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு படையினருடன் இணைந்து பேரிடர் மீட்பு குழுவினர், ஆலையில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்டனர்.

இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர். அவர்கள் நாசிக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News