டிசம்பர் 10 முதல் டெல்லியில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
- அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பரான செர்ஜியோ கோர் இந்தியாவின் புதிய தூதராக பொறுப்பேற்றார்.
- இந்தியாவுடனான நட்பை தொடர்ந்து நீடிப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.
புதுடெல்லி:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கடும் வரி விதித்தார். ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு இந்தியா பணியவில்லை.
தொடர்ந்து இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே, இந்தியா உடனான நட்பை தொடர்ந்து நீடிப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி தனது சிறந்த நண்பர் என டிரம்ப் சொல்லி வருகிறார். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.
அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பரான செர்ஜியோ கோர் இந்தியாவின் புதிய தூதரக பொறுப்பேற்றுள்ளார். அவர் பதவி ஏற்ற விழாவில் பேசிய அதிபர் டிரம்ப் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என சூசகமாக தெரிவித்தார். அவரின் இந்த கருத்து இந்தியாவுடனான வர்த்தக முன்னேற்றத்திற்கான ஒரு படிக்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை டிசம்பர் 10ம் தேதி முதல் டெல்லியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.