செய்திகள்

தமிழகத்தில் தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகளில் இன்று தீர்ப்பு - ஐகோர்ட்டு அறிவிப்பு

Published On 2019-03-22 01:06 GMT   |   Update On 2019-03-22 01:06 GMT
தமிழகத்தில் தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கு களின் விசாரணை முடிந்தது. அதன் தீர்ப்பை இன்று வழங்குவதாக ஐகோர்ட்டு அறிவித்துள்ளது. #ParliamentElection #ChennaiHighCourt
சென்னை:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை தள்ளி வைக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், “மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ளதால், அன்று இந்துக்களால் ஓட்டுபோட முடியாது. அதனால், தேர்தலை வேறு தேதிக்கு தள்ளிவைக்கவேண்டும்” என்று பார்த்தசாரதி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அதேபோல, தமிழ்நாடு பிஷப் கவுன்சில் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ஏப்ரல் 18-ந் தேதி பெரிய வியாழன் வருவதால், அன்று கிறிஸ்தவர்களால் ஓட்டுப்போட வரமுடியாது. மேலும், தேவாலயங்களுடன் பள்ளிக்கூடங்களும் இருப்பதால், அங்கு தேர்தல் நடத்தப்பட்டால், வழிபாடு செய்யவும் பாதிப்பு ஏற்படும். அதனால், தேர்தலை தள்ளிவைக்கவேண்டும்” என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்குகள் ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் நேற்று விசாரித்தனர்.

அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், “மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேர்தல் நேரம் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தலை முறையாக நடத்த பக்தர்களுக்கான இலவச வினியோகங்களுக்கு மாவட்ட கலெக்டரிடம் முன்அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல பெரிய வியாழன் தினத்தை அனுசரிப்பதற்கு தேர்தல் எவ்விதத்திலும் இடையூறாக இருக்காது. வாக்குச்சாவடி மையங்களில் உள்ள தேவாலயங்களுக்கு வந்து செல்வதற்காக பிரத்யேகமாக தடுப்பு வேலிகள் அமைக்கப்படும்” என்று கூறினார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “மதம் சார்ந்த வழிபாடுகள் எப்படி ஒவ்வொருவருக்கும் கடமையாக உள்ளதோ, அதேபோல தேர்தலில் ஓட்டு போடுவதையும் கடமையாக கருத வேண்டும்” என்று கருத்து தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்குகளின் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பிப்பதாக கூறினர். #ParliamentElection #ChennaiHighCourt
Tags:    

Similar News