null
#T20worldcup கேட்சுகளை தவறவிடுவது கவலை அளிக்கிறது- இந்திய அணி பந்து பயிற்சியாளர் மோர்கல்
- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 2 கேட்சுகளை தவறவிட்டார்.
- இந்த தொடரில் இந்திய வீரர்கள் இதுவரை 13 கேட்சுகளை தவறவிட்டனர்.
மும்பை:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2-வது அரைஇறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா-ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 6-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பை அரையிறுதியில் விளையாடுகிறது. இதில் 3-ல் வெற்றி பெற்றது. 2 போட்டியில் தோற்றது.
இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி இதே மும்பை மைதானத்தில் மோதின. இதில் 150 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் ஆடும். இந்தியாவை போலவே இங்கிலாந்து அணியும் 6-வது முறையாக அரை இறுதியில் ஆடுகிறது.இதற்கு முன்பு விளையாடிய 5 அரைஇறுதியில் 3-ல் வெற்றி பெற்றது. இரண்டில் தோற்றது.
இன்றைய போட்டி குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறிய தாவது:-
ஆட்டத்தில் கேட்சுகளை தவறவிடுவது கவலை அளிக்கிறது. வெளிப்படையாக யாரும் வேண்டுமென்றே கேட்சுகளை தவறவிடுவது கிடையாது. பீல்டிங்கில் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். வீரர்கள் பயிற்சியின் போது கடினமாக உழைத்து வருகிறார்கள்.
வருண் சக்கரவர்த்தி வித்தியாசமான முறையில் பந்து வீசி வருகிறார். அதில் விக்கெட் எடுக்கும் திறனை பெற்று முன்னேறி வருகிறார். சஞ்சு சாம்சன் ஒரு தரமான பேட்ஸ்மேன். அரை இறுதி போட்டிக்காக அவரிடம் அதிகமான உரையாடல் நடைபெறவில்லை. அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை அனுபவம் மூலம் சிறப்பாக கையாண்டார்.
அவர் அணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கடுமையான பயிற்சியை மேற்கொள்வார். கடினமான காலக்கட்டத்தில் அமைதியாக இருந்து போராடிய அவருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு மோர்கல் கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 2 கேட்சுகளை தவறவிட்டார். இந்த தொடரில் இந்திய வீரர்கள் இதுவரை 13 கேட்சுகளை (7 ஆட்டம்) தவறவிட்டனர்.