செய்திகள்

குமரியில் பறக்கும் படையினர் கண்காணிப்பு வாகன சோதனையில் ரூ.7 லட்சம் பறிமுதல்

Published On 2019-03-16 05:32 GMT   |   Update On 2019-03-16 05:32 GMT
குமரியில் பறக்கும் படையினர் கண்காணிப்பு வாகன சோதனையில் ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தக்கலை:

பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் 6 சட்டமன்ற தொகுதிகளிலும், பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா? என்பதையும் கண்காணித்து வருகிறார்கள்.

குளச்சல் பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் நாகர்கோவில் அருகே தம்மத்துகோணம் ஞானம் நகரைச் சேர்ந்த ஆசிரியர் ரொனால்டு மேரி என்பவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம் பறிமுதல் செய்தனர்.

அவரிடம் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததையடுத்து கருவூலகத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணத்தை காட்டி பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டன் கோணம் பகுதியைச்சேர்ந்த ஆசிரியை ஒருவரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அதை தாசில்தார் ஷீலாவிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் மேக்காமண்ட பத்தில் தாசன் என்பவரிடம் இருந்து ரூ.85 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேட்டுக்கடை பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்க கொண்டு சென்ற 11 மிக்சிகளையும் பறிமுதல் செய்தனர்.

குமரி மாவட்டம் முழுவதும் இன்று காலையிலும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சுசீந்திரம், ஆரல்வாய்மொழி பகுதியில் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. கடந்த 3 நாட்களில் 35-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது.

குறிப்பாக சுவர் விளம்பரம், கொடிக்கம்பங்கள் தொடர்பாகவே புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News