தமிழ்நாடு செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம் - டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் குவிப்பு

Published On 2025-12-31 10:25 IST   |   Update On 2025-12-31 10:25:00 IST
  • அதிகம் விற்பனையாகக் கூடிய டாஸ்மாக் கடைகளில் ஒரு வாரத்திற்கான சரக்கு இருப்பு வைக்கப்படுகிறது.
  • தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ரூ.150 கோடி மது விற்பனையாகும்.

சென்னை:

தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் இன்று இரவு தொடங்குகிறது.

நாளை (1-ந்தேதி) அரசு விடுமுறை என்பதால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. அதிகம் விற்பனையாகக் கூடிய டாஸ்மாக் கடைகளில் ஒரு வாரத்திற்கான சரக்கு இருப்பு வைக்கப்படுகிறது.

சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள், ஓட்டல்களில் உள்ள பார்களில் மது விற்பனை அமோகமாக நடைபெறும் என்பதால் அனைத்து வகையான சரக்குகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட விற்பனை களை கட்டும் என்பதால் எல்லா கடைகளிலும் குறைந்த ரக மது பானங்கள் குவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை கடைகள் செயல்படும் என்பதால் அதற்கு முன்பே மதுபானங்களை மொத்தமாக வாங்கி செல்ல குடிமகன்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது குளிர் அதிகமாக இருப்பதால் பிராந்தி, விஸ்கி, ரம் வகைகள் அதிகளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை புத்தாண்டு விற்பனை அனல் பறக்கக்கூடும். பகல் 12 மணி முதல் இரவு வரை மதுக்கூடங்கள் நிரம்பி இருக்கும். சரக்கு இல்லை என்று சொல்லாத அளவிற்கு போதுமான அளவு எல்லா கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ரூ.150 கோடி மது விற்பனையாகும். புத்தாண்டில் கூடுதலாக ரூ.100 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News