இளைஞர்கள் புதிய தொழில்கள் தொடங்க வங்கியில் ரூ.15 லட்சம் வரை கடன்பெறலாம்- கலெக்டர் தகவல்
- அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலை தவிர்த்து மற்ற பொருட்களை வாங்கி விற்கலாம்.
- குறிப்பாக மளிகை, பெட்டிக் கடை, பேன்சி ஸ்டோர், ஸ்டேஷ்னரி கடை தொடங்குபவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு.
தருமபுரி,
தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் UYEGP திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும் மானியத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவரை இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.5. லட்சம் வரை வங்கியில் கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1.25லட்சத்தை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை வங்கியில் கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை பெறலாம்.
ஏற்கனவே உள்ள UYEGP மற்றும் NEEDS திட்டத்தில் பொதுப்பிரிவு ஆண்களுக்கு சுய தொழில் செய்வதற்கு அதிகபட்சமாக 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவ வீரர் ஆகியோர் 45 வயது வரை கடன் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய அரசாணை படி UYEGP மற்றும் NEEDS திட்டத்தில் பொதுப்பிரிவு ஆண்களுக்கு 45 வயது வரையிலும், எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவ வீரர் ஆகியோர்க்கு 55 வயது வரையிலும் வங்கியில் UYEGP மற்றும் NEEDS திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டில் வியாபாரம் செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலை தவிர்த்து மற்ற பொருட்களை வாங்கி விற்கலாம்.
தொழிற்சாலை இயந்திர உபரிபாகங்கள், மூலப்பொருட்கள், கடை குறிப்பாக மளிகை, பெட்டிக் கடை, பேன்சி ஸ்டோர், ஸ்டேஷ்னரி கடை தொடங்குபவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு.
கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், SIDCO தொழிற்பேட்டை, ஒட்டப்பட்டி, தருமபுரி அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 8925533941, 8925533942 மற்றும் 04342-230892 ஆகிய எண்களுக்கு தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.