உத்தமபாளையத்தில் பைக் மீது கார் மோதி வாலிபர் பலி
- மோட்டார் சைக்கிளில் குமுளி சென்று விட்டு மீண்டும் சின்னமனூர் நோக்கி திரும்பிக் கொண்டு இருந்தனர்.
- உத்தமபாளையம் அருகே பைபாஸ் சாலையில் இவர்கள் வந்து கொண்டு இருந்தபோது வத்தல க்குண்டு அருணாச்சல புரத்தைச் சேர்ந்தவர் ஓட்டி வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
தேனி மாவட்டம் மேகமலை ஹைவேவிஸ் எஸ்டேட் பேன்சா காலனியைச் சேர்ந்தவர் மந்திரி மகன் கவுதம் (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான மனோஜ் (16), ராஜா (15) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் குமுளி சென்று விட்டு மீண்டும் சின்னமனூர் நோக்கி திரும்பிக் கொண்டு இருந்தனர்.
உத்தமபாளையம் அருகே புதிதாக போடப்பட்ட பைபாஸ் சாலையில் இவர்கள் வந்து கொண்டு இருந்தபோது வத்தல க்குண்டு அருணாச்சல புரத்தைச் சேர்ந்த ஷர்மா (22) என்பவர் ஓட்டி வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பைக்கில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்ட னர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கவுதம் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சையில் உள்ளனர். இது குறித்து கவுதமின் தாய் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.