உள்ளூர் செய்திகள்

ஆவடி ரெயில் நிலையம் அருகே ரெயில் முன்பு பாய்ந்து பெண் போலீஸ் தற்கொலை

Published On 2023-01-26 10:23 GMT   |   Update On 2023-01-26 10:23 GMT
  • ஆவடி ரெயில்வே போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
  • ரெயில் முன்பு பாய்ந்து பெண் போலீஸ் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநின்றவூர்:

திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (வயது35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பரங்கிமலையில் லஞ்ச ஒழிப்பு துறையில் காவலராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை ஸ்ரீபிரியா ஆவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ரெயில் மோதியதில் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆவடி ரெயில்வே போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இன்று காலை 10 மணியளவில் ஸ்ரீபிரியா தண்டவாளம் அருகே நடந்து வந்தபோது சென்னை நோக்கி வந்த ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பாய்ந்ததை சில பயணிகள் பார்த்ததாக தெரிவித்து உள்ளனர்.

எனவே அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பணி செய்த இடத்தில் ஏதேனும் நெருக்கடி இருந்ததா? அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

ரெயில் முன்பு பாய்ந்து பெண் போலீஸ் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News