உள்ளூர் செய்திகள்

விரட்ட முயன்ற விவசாயிகளை துரத்திய காட்டு யானைகள்

Published On 2022-12-16 16:06 IST   |   Update On 2022-12-16 16:06:00 IST
  • 3 மாதங்களாக 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
  • காட்டுக்குள் விரட்ட முயன்றனர். அப்போது யானைகள் விவசாயிகளை துரத்தின.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே மேலுமலை மற்றும் பிக்கனப்பள்ளி வனப்பகு தியில் கடந்த 3 மாதங்களாக 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

இந்த காட்டு யானைகள் கிருஷ்ணகிரி, மேலுமலை சூளகிரி சுற்றுவட்டார வனப்பகுதிகளில் முகாமிட்டு அப்பகுதியில் உள்ள விளைநிலங்களை நாசம் செய்து வந்தன.

நேற்று காலை பிக்கனப்ப ள்ளி வனப்பகுதியில் இருந்து எண்ணெகொள் புதூர் கிராமத்தில் புகுந்த 3 காட்டு யானைகள் அப்பகுதியில் கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்தன.

நேற்று காலையில் வயலுக்கு சென்ற விவசாயிகள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காட்டு யானைகளை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காட்டுக்குள் விரட்ட முயன்றனர். அப்போது யானைகள் விவசாயிகளை துரத்தின.

தற்போது அந்த 3 காட்டு யானைகளையும் விரட்டும் பணியில் ராயக்கோட்டை வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். காட்டு யானைகளின் அட்டகா சத்தால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் அகலக்கோ ட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கல்லுப்பாலம், தேர்வீதி கிராம பகுதிகளில் விவசாயிகளின் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் அங்கு பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்து உதவி வன பாதுகாவலர் ராஜமாரியப்பன், ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் சேதமான பயிர்களை பார்வையிட வந்தனர். ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் மற்றும் விவசாயிகள் அங்கு திரண்டனர். யானைகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அப்போது வனத்துறை யினருக்கும், விவசாயிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு உண்டானது. அதன்பிறகு பயிர்கள் சேதமான தோட்ட உரிமையாளர்கள் விவரங்களை அதிகாரிகள் சேகரித்து சென்றனர்.

Similar News