நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக சரிவு 10 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல்லில் இன்று பரிசல் இயக்க அனுமதி
- 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
- சுற்றுலா பயணிகள் 10 நாட்களுக்கு பிறகு பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
தருமபுரி,
கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு அதிகரித்ததால் காவிரி ஆற்றில் தமிழக எல்லை யான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து 10 ஆயிரம் கனஅடியாகவே இருந்தது.
தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால், கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லில் நேற்று 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தொடர்ந்து 10-வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது.இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக சரிந்ததால், ஒகேனக்கல்லில் இன்று முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.இதைத்தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு இன்று சுற்றுலாவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் 10 நாட்களுக்கு பிறகு பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.