- நீர்ப்பழம் என்கின்ற தர்பூசணி தாகத்தை தணிப்பதில் முக்கிய இடம் வகிக்கிறது.
- அதிக மழையால் தர்பூசணி விளைச்சல் குறைந்து போயுள்ளது.
பல்லடம் :
கோடை காலத்தை முன்னிட்டு வெப்பத்தைத் தணிக்க குளிர்பானம் மற்றும் தர்பூசணி,வெள்ளரி,பழரசம் போன்றவற்றை மக்கள் உட் கொள்வார்கள். இதில் நீர்ப்பழம் என்கின்ற தர்பூசணி தாகத்தை தணிப்பதில் முக்கிய இடம் வகிக்கிறது. அந்த வகையில் பல்லடம் பகுதியில் தற்போது தர்பூசணி விற்பனை சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
இது குறித்து பல்லடத்தைச் சேர்ந்த தர்பூசணி வியாபாரி ஒருவர் கூறியதாவது:- திண்டிவனம் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் விளைந்த தர்பூசணியை விற்பனைக்கு கொண்டு வருகிறோம்.
அதிக மழையால் தர்பூசணி விளைச்சல் குறைந்து போயுள்ளது. இதனால் தர்பூசணி விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. சென்ற வருடம் கிலோ 15 ரூபாய்க்கு விற்ற தர்பூசணி தற்போது கிலோ 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இருந்த போதிலும் மக்கள் தர்பூசணியை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.