ஓட்டலில் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு
- உடல்நலம் பாதிக்கப்பட்ட 4 பேரும் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
- இந்த ஓட்டலில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே பிரபல தனியார் ஓட்டலில் கடந்த 13-ஆம் தேதி மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மோகன் (வயது 27) தனது குடும்பத்துடன் கோழி இறைச்சியில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு இரவு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் ஓட்டலில் சாப்பிட்ட 4 பேரும் வாந்தி வயிற்றுப்போக்கால் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். உடனடியாக 4 பேரும் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து மோகன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்தில் உள்ள ஓட்டலுக்கு நேரில் சென்று விசாரித்துவிட்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் ஊரப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஓட்டலில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் சைவம் மற்றும் அசைவ ஓட்டல்கள் உள்ளன பெரும்பாலான ஓட்டல்களில் தரமான உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா? என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அடிக்கடி வந்து நேரில் ஆய்வு செய்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.