உள்ளூர் செய்திகள்

இளம்பெண் வீட்டை விட்டு விரட்டியடிப்பு

Published On 2022-09-20 07:59 GMT   |   Update On 2022-09-20 07:59 GMT
  • பெண் குழந்தை பெற்றதாக கூறி இளம்பெண் வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டார்.
  • இது சம்பந்தமாக வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜபாளையம்

ராஜபாளையம் சுந்தரி ராஜா தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன். வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவருக்கு ராஜபாளையம் ஆண்டத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரண்யாதேவி (வயது 24) என்பவருடன் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமண மானது.

திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் ராஜபாளையம் ஸ்ரீரங்கபாளையத்தில் வாடகை வீட்டில் குடிேயறினர். அவர்களுடன் ராஜேஷ்கண்ணனின் அக்காள் அனுராதாவும் தங்கியிருந்தார்.

ராஜேஷ் கண்ணனுக்கு சரண்யாதேவியை விட அதிக வயது என்று கூறப்படுகிறது. அதனை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக கூறி தனது கணவரிடம் சரண்யாதேவி கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரண்யாதேவிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையுடன் கணவர் வீட்டில் வசித்து வந்த நிலையில், பெண் குழந்தை பெற்றதாக கூறி சரண்யாதேவியை அவரது கணவர் மற்றும் கணவரின் அக்காள் வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தனது குழந்தையுடன் சரண்யாதேவி தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். தன்னை வீட்டை விட்டு விரட்டியதாக கணவர் மற்றும் அவரது அக்காள் மீது ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் ராஜேஷ்கண்ணன் மற்றும் அவரது அக்காள் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News