குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியல்
- குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- குன்னூர் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட குன்னூர் ஊராட்சியில் திருவள்ளுவர் காலனி, கலைஞர் காலனி என இரு காலனிகள் உள்ளன. இங்கு 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் சரியாக ஏற்றப்படாமல் இருப்பதால் கிராம மக்களுக்கு தண்ணீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இந்தநிலையில் அந்த பகுதி மக்கள் குன்னூர் செல்லும் சாலையில் தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கிருஷ்ணன்கோவில் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர்.
இதில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் குன்னூர் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.