- தொழிலாளி மாயமானார்.
- சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மாலை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 36), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரேமா (32) இவர்களுக்கு நவீன் குமார் (13) என்ற மகனும் ஹரிணி (7) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிரேமா கோபித்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து ரமேஷ் குழந்தைகளை கவனித்து வந்தார். பலமுறை பிரேமாவை சமாதானப்படுத்த முயன்றபோதும் அவர் கணவருடன் சேர்ந்து வாழ சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரமேஷ் திடீரென மாயமானார். எங்கு சென்றார் என்று தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து மகனை கண்டுபிடித்து தருமாறு ரமேஷின் தாய் சாந்தி சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.