மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாப சாவு
- மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் மாசாணம் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் முத்துகிருஷ்ணன் (வயது21). அதே பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன் (24). முத்துகிருஷ்ணனும், மணிகண்டனும் நண்பர்கள். இவர்கள் இருவரும் நேற்று இரவு மது அருந்திவிட்டு நள்ளிரவு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது.
மோட்டார் சைக்கிளை முத்துகிருஷ்ணன் ஓட்டி வந்தார். மணிகண்டன் பின்னால் அமர்ந்து வந்தார். மோட்டார் சைக்கிள் ஆராய்ச்சி ஊரணி பகுதியில் வந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.
பின்தலையில் பலத்த காயமடைந்த முத்து கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயங்களுடன் கிடந்த மணிகண்டன் உறவினர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சேத்தூர் புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். முத்துகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மணிகண்டனை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.