- சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் பெருமாள் கோவில் ஆனி தேரோட்டம் நடைபெற்றது.
- ஆனி பிரமோற்சவ விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் 108 திவ்ய தலங்களில் பிரசித்தி பெற்ற நின்ற நாரயண பெருமாள் கோவில் உள்ளது.
இங்கு ஆனி பிரமோற்சவ விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை யொட்டி பெருமாள்- செங்கமல தாயார் கோவில் மாட வீதிகளில் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
ஆனி திருவிழாவில் முக்கிய விழாவான திருத்தேரோட்டம் விமரிசையாக நடந்தது. மேளதாளத்துடன் வேத மந்திரங்கள் முழங்க கோவிந்தா, கோவிந்தா, கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் நான்கு மாடவீதிகளிலும் வலம் வந்தது.
தேரோட்டத்தில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா, காளி ராஜன் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.