உள்ளூர் செய்திகள்

விருதுநகர் தொழிலதிபர் கொலையில் 4 பேரிடம் தீவிர விசாரணை

Published On 2023-07-27 07:26 GMT   |   Update On 2023-07-27 07:26 GMT
  • பழிக்கு பழியாக நடந்த விருதுநகர் தொழிலதிபர் கொலையில் 4 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
  • தலைமறைவானவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மேலத்தெருவை சேர்ந்தவர் குமரவேல் (வயது47). தொழிலதிபரான இவர் நகராட்சியில் மார்க்கெட் குத்தகை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். மார்க்கெட்டில் ஏலம் எடுப்பது தொடர்பான முன்விரோதத்தில் கடந்த மாதம் திருமங்கலம் மையிட்டான்பட்டியை சேர்ந்த அறிவழகன் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்கு பழியாக குமரவேலை 8பேர் கொண்ட சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதில் அவரது உறவினர்கள் ரூபி, ராம்குமார் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கொலை சம்பவத்தில் தொடர்புடைய விருதுநகரை சேர்ந்த சண்முகம் மகன் பால்பாண்டி என்ற பவர் பாண்டி (20), சிவகாசியை சேர்ந்த முத்துவிஜயன் மகன் செல்வம் (20) ஆகிய 2 பேர் சேலம் மாவட்டம் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தனிப்படை போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் விருதுநகருக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் கொலையான குமரவேலின் நடவடிக்கை குறித்து கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்த அல்லம் பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் என்ற வெங்க டேஷ்வரன்(25), பாலமுத்துகுமார் (22) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்துள்ளனர். இவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News