உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 12 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி- நாளைக்குள் அனுமதி பெற வேண்டுகோள்

Published On 2022-08-27 14:44 IST   |   Update On 2022-08-27 14:44:00 IST
  • நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
  • கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விமர்சையாக நடத்தப்படவில்லை. இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி சிறப்பாக நடத்தப்படுகிறது

நெல்லை:

நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

விதவிதமான வடிவங்கள்

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகளிலும், ஆலயங்களுக்கு சென்றும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது வழக்கம்.

விநாயகர் சதுர்த்திக்காக விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை கடலில் கரைக்கப்படுவது வழக்கம் ஆகும். இந்து அமைப்புகளின் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பின்னர் கடலில் கரைக்கப்பட்டு வருகிறது.

2 ஆண்டுகளுக்கு பின்னர்

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விமர்சையாக நடத்தப்படவில்லை.

இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி சிறப்பாக நடத்தப்படுகிறது. விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்பாடுகளை அறிவுறுத்தி உள்ளது.

12 இடங்கள் அறிவிப்பு

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க 12 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நெல்லை மாநகரில் பேராட்சி அம்மன் கோவில், வண்ணார்பேட்டை, குறிச்சி தாமிரபரணி ஆறு கொக்கிரகுளம், மணிமூர்த்தீஸ்வரம், தாழையூத்தில் நாரணம்மாள்புரம் தாமிரபரணி ஆறு, கூடங்குளத்தில் செட்டிகுளம் கடற்கரை, தில்லிவனம் தோப்பு கடற்கரை, உவரியில் உவரி கடற்கரை, சேரன்மகாதேவியில் சேரன்மகாதேவி தாமிரபரணி ஆறு, கூனியூர் கன்னடியன் கால்வாய், வீரவநல்லூரில் திருப்புடைமருதூர் தாமிர பரணிஆறு, கோபாலசமுத்தி ரத்தில் தாமிரபரணிஆறு, வி.கே.புரத்தில் பாபநாசம் தாமிரபரணிஆறு உள்ளிட்ட இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல்

மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாடும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

மாநகர பகுதியை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் சிலை அமைக்கும் இடங்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர்களிடமும், மாவட்ட பகுதியை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி.யிடமும் அனுமதி பெறவேண்டும்.

நாளைக்குள்

அதன்படி நாளை (28-ந்தேதி)க்குள் விண்ணப்பித்து அனுமதி பெற்று கொள்ள வேண்டும்.

சிலை தயாரிக்க ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கூடாது, சிலைகளுக்கு வர்ணம் பூச நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 12 இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு

மேலும் விபரங்களுக்கு மாநகர போலீஸ் கமிஷனர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சப்-கலெக்டர், சேரன்மகாதேவி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை அணுகலாம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News