உள்ளூர் செய்திகள்

பஸ்சில் இருந்து பயணியை கீழே தள்ளி விட்ட கண்டக்டர் பணியிடை நீக்கம்

Published On 2022-11-21 07:51 IST   |   Update On 2022-11-21 07:51:00 IST
  • பெங்களூருவில் இருந்து இயக்கப்பட்ட அரசு பஸ் நள்ளிரவு வந்தவாசிக்கு வந்தது.
  • கண்டக்டர் பயணியை பிடித்து பஸ்சில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.

விழுப்புரம் :

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டம் சார்பில் வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் பெங்களூருவில் இருந்து இயக்கப்பட்ட அரசு பஸ் கடந்த 17-ந் தேதி நள்ளிரவு வந்தவாசிக்கு வந்தது. வந்தவாசி பழைய பஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்ட பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கினர். ஆனால் மதுபோதையில் இருந்த ஒரு வாலிபர் மட்டும் இறங்காமல் இருந்தார். கண்டக்டர் பிரகாஷ் அவரை சிரமப்பட்டு இறக்க முயன்றார். ஆனால் அவர் இறங்காமல் பஸ் படிக்கட்டில் தள்ளாடியபடி நின்றார். அப்போது கண்டக்டர் பிரகாஷ் பயணியை பிடித்து பஸ்சில் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் அவர் சாலையில் விழுந்தார். பின்னர் அந்த பஸ், வந்தவாசி போக்குவரத்து பணிமனைக்கு சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து டெப்போ உதவி பொறியாளர் துரை கூறுகையில், அவலூர்பேட்டையில் ஏறிய அந்த பயணி பஸ்சிலேயே மது அருந்தியும், பஸ்சிலேயே சிறுநீர் கழித்தும் பிற பயணிகளுக்கு தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அந்த பயணி கீழே தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதுபற்றி அறிந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட அதிகாரி விசாரணை மேற்கொண்டு, பஸ்சில் இருந்து பயணியை வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிட்டதாக கண்டக்டர் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News