நெல்லை அருகே வறட்சி நிவாரணம் கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
- மழை இல்லாததால் பயிரிட்டிருந்த பயிர்கள் அனைத்தும் சருகாக காய்ந்து விட்டன.
- நெல்லை மாவட்டத்தில் 25 வட்டாரங்கள் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. அதனால் பயிர்கள் அனைத்தும் நீரின்றி கருகி விட்டன.
விவசாயிகள் கோரிக்கை
இந்நிலையில், நெல்லை மாவட்டம் வன்னிக்கோனேந்தல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட தேவர்குளம், மேலே இலந்தகுளம், மூவிருந்தாளி உள்ளிட்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கக்கோரி ஏற்கெனவே மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மழை இல்லாததால் பயிரிட்டிருந்த பயிர்கள் அனைத்தும் சருகாக காய்ந்து விட்டன. அதனால் அதற்கான காப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அதற்கு இதுவரை பதில் இல்லை என கூறி அதனை கண்டித்தும், நெல்லை மாவட்டத்தில் 25 வட்டாரங்கள், அரசால் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வன்னிகோனேந்தல் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட 9 ஊராட்சிகளையும் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட வில்லை. எனவே வன்னிக்கோனேந்தல் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட 9 கிராமங்களையும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து போர்க்கால அடிப் படையில் நிவாரணமும் பயிர் காப்பீட்டும் முறையாக வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் இன்று வன்னிக்கோனேந்தலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதில் 500-க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.