சாகும் நேரத்தில் விபத்தை தடுத்த லாரி டிரைவர்
- திடீர் நெஞ்சுவலியால் அலறி துடித்தார்
- இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
வேலூர்,:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தினகரன் (வயது 47). பார்சல் சர்வீஸ் லாரி ஓட்டி வந்தார். நேற்று ஆம்பூரில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்று பொருட்களை இறக்கினார்.
இன்று காலை சென்னையில் இருந்து வேலூரை நோக்கி லாரியை ஓட்டி வந்தார். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் வள்ளலார் அருகே லாரி வந்தபோது தினகரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த தினகரன் சம யோசித்தமாக செயல்பட்டு லாரியை சாலையோரம் நிறுத்தினார். இதனால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன.
ஒரு சில நிமிடங்களில் தினகரன் பரிதாபமாக இறந்தார். நீண்ட நேரம் லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டு டிரைவர் ஸ்டேரிங் மீது விழுந்து கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் கண்டனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தினகரனை பரிசோதித்த போது அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரிய வந்தது. அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த டிரைவிங் லைசன்ஸ் மூலம் அவரது முகவரியை கண்டுபிடித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.