உள்ளூர் செய்திகள்

ைபக் மீது முறிந்து விழுந்த ஆலமரக்கிளையை படத்தில் காணலாம் .

தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Published On 2023-06-19 14:58 IST   |   Update On 2023-06-19 14:58:00 IST
  • வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர்கள் உத்தரவிட்டனர்
  • மரக்கிளை முறிந்து விழுந்து 2 பேர் காயம்

வேலூர்:

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வெயில் தாக்கம்

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. பல்வேறு மாவட்டங்களில வெயிலின் அளவு 100 டிகிரியையும் தாண்டி அணல் காற்று வீசியது. கடந்த 4 மாதமாக வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று கூடுதலாக வெயிலின் தாக்கம் காணப்பட்டது.

இந்தநிலையில் வேலூரில் நேற்று காலை லேசான சாரல் மழை பெய்தது. இதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலை மழையின் அளவு அதிகமானது.

பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தப்படியும் மிகவும் சிரமத்துடன் சென்றனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால், இந்த 2 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர்கள் உத்தரவிட்டனர்.

காலை 7.30 மணியளவில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மிகவும் சிரமத்துடன் மீண்டும் மழையில் நனைந்தபடியே வீட்டுக்கு சென்றனர்.

இதில் காஞ்சிபுரம் மாவட்டம், பெருநகர் பகுதியை சேர்ந்த மகாதேவன் (வயது 66) மற்றும் அவரது மகன் குமார் (33) ஆகியோர் இன்று அதிகாலை பனப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் வந்தனர்.

பின்னர் மீண்டும் காஞ்சிபுரம் செல்ல திருமால்பூர் சுடுகாடு அருகே சென்றபோது, சூறைகாற்றுடன் மழை பெய்தது. அப்போது திடீரென ஆலமரக்கிளை முறிந்து, பைக் மீது விழுந்தது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை, அந்த பகுதி மக்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பகலில் தொடர் மழை பெய்ததால் அனைத்து அத்தியாவசிய பணிகளும் பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News