அழகிய பூங்காவுடன் "நம்ம வேலூர்" செல்பி பாயிண்ட்
- பழமை மாறாத வகையில் நடைபாதைகள்
- பொதுமக்கள் மகிழ்ச்சி
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகு படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
வேலூர் கோட்டை நவீன முறையில் அழகு படுத்தப்பட்டுள்ளது. பழமை மாறாத வகையில் நடைபாதைகள் மற்றும் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோட்டை கொத்தள சுவர்கள் இரவிலும் மின்னும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர் கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கோட்டையில் பல்வேறு இடங்களில் நின்று செல்போனில் பணம் எடுத்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க நம்ம வேலூர் என்று பெரிய வாசகத்துடன் செல்போனில் படம் எடுத்து மகிழ்ச்சி அடையும் வகையில் மாநகரப் பகுதியில் செல்பி பாயிண்ட் ஒன்று அமைக்கப்பட உள்ளது.
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஏற்கனவே மாநகராட்சி நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தூணுக்கு அருகில் அழகிய பூங்கா அமைக்கப்பட உள்ளது. அதில் நம்ம வேலூர் என்ற எழுத்துக்கள் இடம்பெற உள்ளன.இதில் நின்று செல்போனில் செல்பி எடுக்கும் வகையில் வசதி செய்யப்பட உள்ளது.
இது குறித்த தீர்மானம் வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
விரைவில் நம்ம வேலூர் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டு திறக்கப்படும். வீரத்தின் அடையாளமாக இருக்கும் வேலூர் மக்கள் நம்ம வேலூர் முன்பு கம்பீரமாக செல்பி எடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.