உடல் தோண்டி எடுக்கப்பட்ட காட்சி.
மதுவில் விஷம் கலந்து கொடுத்து பால்காரர் கொலை?
- 4 மாதத்திற்கு பின் உடல் தோண்டி எடுப்பு
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த மலை சந்து பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 35). பால்காரர். இவரது மனைவி ஜெயப்பிரியா. இவர்களுக்கு 8 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது.
குடும்ப பிரச்சினை காரணமாக சில நாட்களிலேயே ஜெயப்பிரியா கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். நடராஜன் அதே பகுதியை சேர்ந்த சந்தியா என்பருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊசூர் புளியந்தோப்பு அருகே நடராஜன் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடப்பதாக நடராஜனின் அண்ணன் சேட்டுவிற்கு தகவல் கிடைத்தது.
அவர் சம்பவ இடத்திற்கு நண்பர் கோபியுடன் சென்று மயக்க நிலையில் கிடந்த நடராஜனை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று நவம்பர் 2-ந் தேதி வீட்டிற்கு வந்தார். பின்னர் 5-ம் தேதி உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற சில மணி நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்காமல் சுடுகாட்டில் புதைத்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நடராஜனின் அண்ணன் சேட்டு கடந்த பிப்ரவரி மாதம் 2-ந் தேதி அரியூர் போலீஸ் நிலையத்தில் தனது தம்பி நடராஜனின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், அரியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் முன்னிலையில் நடராஜன் உடலை தோண்டி எடுத்தனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது எலும்பு கூடுகளை ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.