டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வீசி குடிமகன்கள் பயங்கர மோதல்
- ஆள் மாறாட்டத்தில் வியாபாரிக்கு கத்திகுத்து
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி ஏரியூரைச் சேர்ந்த சந்துரு, பாஸ்கர், மற்றும் புது வசூரை சேர்ந்த அசோகன் அலமேலு மங்காபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் ஆகியோர் பெருமுகை டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் மது குடித்தனர்.
மது குடித்தும் தகராறு
அப்போது அவர்களுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் திடீரென மோதல் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த இரு தரப்பினர் சரமாரியாக தாக்கினர். மேலும் அவர்கள் மது பாட்டில்களை தூக்கி வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மது வாங்க வந்தவர்களும் அங்கிருந்து மது குடித்தவர்களும் நாலாபுறம் சிதறி ஓடினர்.
இது குறித்த தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதற்குள் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதற்கிடையே சந்துரு பாஸ்கர் அசோகன் சக்திவேல் ஆகியோர் இரவு 11 மணிக்கு மீண்டும் பெருமுகை பகுதிக்கு வெட்டு கத்தியுடன் சென்றனர்.
பெருமுகை வ.உ.சி. நகரை சேர்ந்த வியாபாரி யுவராஜ் (வயது 41) அங்குள்ள தெருவில் நின்று கொண்டிருந்தார்.
அவரை தங்களுடன் மோதிய கும்பல் என நினைத்த சந்துரு தரப்பினர் யுவராஜை தாக்கினர்.மேலும் கத்தியால் அவரை வெட்டினர். சத்துவாச்சாரி போலீசார் கத்தி வெட்டில் படுகாயமடைந்த யுவராஜை மீட்டு பூட்டுத் தாக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். மற்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.