வாலிபர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
- வேலூர் எஸ்.பி. ஆபீசில் பரபரப்பு
- கொடுத்த பணத்தை திருப்பி தராததால் விரக்தி
வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த தார்வழி பகுதியை சேர்ந்தவர் ஜெயகோபி (வயது 40). இவருக்கு தெரிந்த நபர் ஒருவருக்கு ரூ.1.50 லட்சம் கடன் கொடுத்து உள்ளார்.
கடனை வாங்கியவர் நீண்ட நாட்களாக திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயகோபி இன்று மதியம் எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார். நுழைவு வாயிலில் இருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது பாட்டிலில் தான் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஜெயகோபி மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனிடம் அவரை அழைத்துச் சென்றனர். அவர் அறிவுரை வழங்கி அணைக்கட்டு போலீசில் புகார் தெரிவிக்கும் படி ஜெயகோபியை அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.