மூதாட்டிக்கு முதலுதவி செய்வது போல நடித்து நகை பறித்த நர்சு
- கண்காணிப்பு கேமராவில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சலவன் பேட்டை திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் குப்பு (வயது 55) அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார்.
கடந்த 22-ந் தேதி இவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.
அப்போது அந்த வழியாக பின்னர் சென்று கொண்டிருந்தார் அவரிடம் தனக்கு மயக்கம் வருவதாக குப்பு கூறினார். உடனே அந்த பெண் முதலுதவி அளிப்பதாக கூறி குப்புவை அவரது வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். வீட்டுக்குள் சென்றதும் குப்பு மயங்கி விழுந்தார்.
இதனை பயன்படுத்திக் கொண்ட அந்தப் பெண் குப்பு அணிந்திருந்த 3 பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து குப்பு கண்விழித்தார். அப்போது அவரது நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது குப்புவிற்கு முதலுதவி செய்வது போல நடித்து நகை பறித்து சென்ற பெண்ணின் உருவம் கேமராவில் பதிவாகி இருந்தது. இதன் மூலம் மூதாட்டியிடம் நகை பறித்த பலவன்சாத்துகுப்பம் கலைஞர் நகரை சேர்ந்த வனிதா (39) என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
கைதான வனிதா ஏற்கனவே பல ஆஸ்பத்திரிகளில் நர்சாகப் பணியாற்றி உள்ளார். சம்பவத்தன்று குப்பு மயங்கியதும் நகை பறித்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.