பஸ்சில் தம்பதியிடம் 30 பவுன் நகை திருட்டு
- இருவரும் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட்டுகள் வாங்குவதற்காக பஸ்சில் இருந்து இறங்கினர்.
- கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்து விசாரணை
வேலூர்,
திருவண்ணாமலையை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மனைவி சீதா. இவர்கள் இருவரும் விடுமுறைக்காக ஆம்பூர் சென்று விட்டு மீண்டும் நேற்று அரசு பஸ்சில் திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
30 பவுன் திருட்டு
வேலூர் புதிய பஸ்நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக சிறிதுநேரம் பஸ் நின்றது. அந்த சமயம் கணவன், மனைவி இருவரும் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட்டுகள் வாங்குவதற்காக பஸ்சில் இருந்து இறங்கினர்.
அப்போது அவர்கள் பையை பஸ்சில் வைத்துவிட்டு சென்றனர். கடைக்கு சென்று தேவையான வற்றை வாங்கி விட்டு சிறிதுநேரத்துக்கு பின்னர் அவர்கள் பஸ்சில் ஏறி இருக்கையில் அமர்ந்தனர்.
பஸ்சில் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 30 பவுன் நகை காணாமல் போயிருந்தது.
அதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் இதுபற்றி அங்கிருந்த வர்களிடம் கேட்டும் உரிய தகவல் கிடைக்கவில்லை.
கேமராக்கள் ஆய்வு
இதையடுத்து இதுகுறித்து சீதா வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள அதிநவீன கேமராக்கள் மற்றும் பஸ் நிலையத்தை சுற்றி சாலைகளில் வைக்கப்பட்டுள்ள கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன் மூலம் நகை திருடன் பிடிபடுவான் என போலீசார் தெரிவித்தனர்.