உள்ளூர் செய்திகள்

கூடுதல் மாணவர் சேர்க்கையால் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் திணறும் அரசு பள்ளிகள்

Published On 2022-07-27 10:08 GMT   |   Update On 2022-07-27 10:08 GMT
  • தரம் உயர்த்தப்பட்ட லால்குடி உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகிறார்கள்.
  • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தரப்பில் கூறுகையில், பல அரசு பள்ளிகளில் நபார்டு வங்கி உதவியுடன் வகுப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

திருச்சி:

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. திருச்சி மாவட்டத்திலும் அரசு மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளிலும் அதிகமாக மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பல பள்ளிகளில் குடிநீர் வசதி, போதிய கழிப்பிட வசதிகள் இல்லாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பூவலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பிட வசதி இல்லாமல் இருந்தது. கழிப்பிடம் கட்ட பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளார்.

இது பற்றி சமூக ஆர்வலர் உமா மகேஸ்வரி என்பவர் கூறும் போது, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அரசு நிர்வாகம் தவறும் நிலையில் ஆசிரியர்கள் தங்களது சொந்த பணத்தை செலவழிக்க நேரிடுகிறது. அனைத்து தேவைகளையும் அவர்களால் பூர்த்தி செய்ய இயலாது. மாணவர்களுக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவது அரசின் பொறுப்பு என தெரிவித்தார்.

அதே போன்று சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்ட லால்குடி உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகிறார்கள். நடுநிலைப் பள்ளியாக இருந்த இந்தப் பள்ளிக்கூடம் கடந்த 2017-ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

இதையடுத்து 450 ஆக இருந்த மாணவர் சேர்க்கை தற்போது 1,000 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் வகுப்பறைகளின் எண்ணிக்கை மாறவில்லை. போதிய வகுப்பறை வசதி இல்லாத காரணத்தால் பள்ளி வராண்டா மற்றும் விளையாட்டு மைதானங்களிலும், மரத்தடியிலும் மாணவர்களை உட்கார வைத்துவிட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது.

ராமாயி என்பவர் கூறும்போது, எனது மகனை இந்த பள்ளியில் முதலில் சேர்த்தேன். ஆனால் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாத காரணத்தினால் தற்போது வேறு பள்ளிக்கு மாற்றி விட்டேன். ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தரமான கல்வி இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது என தெரிவித்தார்.

லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கூறும்போது, இந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. இதனால் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்திய வேண்டிய அவலம் நீடிப்பதாக வேதனை தெரிவித்தார்.

இதுபற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தரப்பில் கூறுகையில், பல அரசு பள்ளிகளில் நபார்டு வங்கி உதவியுடன் வகுப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News