காயல்பட்டினத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டியை ஆக்கிரமித்துள்ள மரங்கள்-நடவடிக்கை எடுக்க நகராட்சிக்கு கோரிக்கை
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் நகராட்சியின் பஸ் நிலைய வளாகத்தில் பெரிய அளவிலான மேல்நிலை குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த குடிநீர் தொட்டி காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது 1955-ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். 65 ஆண்டுகளை கடந்த நிலையிலும் இந்த குடிநீர் தொட்டி உறுதி குறையாமல் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும் தற்போது அது பெரும் ஆபத்தான சூழலில் சிக்கியிருப்பதாக பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
அதாவது மேல்நிலைத் தொட்டியின் பாதுகாப்பிற்கான சுற்றுச்சுவருக்கும் தொட்டியின் தூண்களுக்கும் இடையில் பிரம்மாண்டமான மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இதனால் மரத்து வேர்களின் வளர்ச்சி காரணமாக குடிநீர் தொட்டியின் தூண்கள் சேதமடையகூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டமும் போக்குவரத்து நெருக்கடியும் நிறைந்த இப்பகுதியில் பெரும் விபத்து ஏதேனும் நடந்து விடாமல் இருக்க உடனடியாக குடிநீர் தொட்டியை ஆக்கிரமித்து நிற்கும் மரங்களை அகற்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலரான முகமது அலி காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.