தசரா 2-ம் நாளான இன்று இரவு கற்பக விருட்சம் வாகனத்தில் விசுவகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் அம்மன் பவனி
- பக்தர்கள் வேடம் அணியும் பொருட்கள் தேர்வு செய்து வாங்குவதில், தீவிரம் காட்டி வருகின்றனர்.
- தசரா விழாவின் 1-ம் திருநாளான நேற்று இரவு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் பவனி வந்த காட்சி.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்தசரா பெருந்திருவிழாவில் 2-ம் திருநாளான இன்று இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் கற்பக விருட்சம் வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும், மாலை 4 மணிக்கு சமய சொற்பொழிவு, இன்னிசைகலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்.
விரதம் இருந்து வந்த பக்தர்கள் காலையில் கடலில் நீராடி, கோவிலுக்கு வந்து, காப்பு கட்டி விரதம் இருக்கின்றனர்.
மேலும் தசரா திருவிழாவையொட்டி உடன்குடி பஜார் பகுதியில் கூட்டம் கூட்டமாக குவிந்து வேடம் அணியும் பொருட்கள் தேர்வு செய்து வாங்குவதில், தீவிரம் காட்டி வருகின்றனர்.
தசரா விழாவை முன்னிட்டு பக்தர்களால் உடன்குடி பகுதி பரபரப்பாகவே காணப்படுகிறது. மேலும் முறையான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகள் இல்லாததால், ஒரு வழிப்பாதை அடிக்கடி மீறப்படுகிறது. இதனால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது.