உள்ளூர் செய்திகள்

போக்சோ சட்டத்தில் கைதான தலைமை ஆசிரியர் தற்கொலை

Published On 2022-08-19 15:42 IST   |   Update On 2022-08-19 15:42:00 IST
  • செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்ததாக விரக்தி
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

கலசப்பாக்கம் அடுத்த சீனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது 55). இவர் கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல் தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக சுமார் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக காளியப்பன் மீது போளூர் மகளிர் போலீசில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் கொடுத்தனர்.

இதில் காளியப்பன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஜாமினில் காளியப்பன் வீட்டுக்கு வந்தார். அவர் வந்ததிலிருந்து சரிவர சாப்பிடாமல், தூங்காமலும் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்த வழக்கு சம்பந்தமாக திருவண்ணாமலை கோர்ட்டுக்கு விசாரணைக்காக சென்று வந்துள்ளார்.

காளியப்பன் மிக மனவேதனையுடன் குடும்பத்தாரிடம் நான் செய்யாத தவறுக்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். நான் ஒரு சில ஆண்டுகளில் ஓய்வு பெறும் நிலையில் இப்படி நடந்துள்ளது எனக்கு மிகவும் மன வேதனையாகவும், வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு அவமானமாக இருப்பதாகவும் கூறிவந்து உள்ளார்.

இந்த நிலையில் காளியப்பன் நேற்று தனது வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக அவரது மனைவி விஜயா கடலாடி போலீசில் புகார் அளித்தார். அதில் செய்யாத குற்றத்திற்காக எனது கணவர் காளியப்பன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அவர் மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த காளியப்பனுக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

Tags:    

Similar News